widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Wednesday, June 29, 2011

பணம் தருமா பூரியான் ஃபாத்திஹா?


[ அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லியவை மட்டுமே மார்க்கம் என்பதை அறியாமல், கற்பனைக் கதைகளையே மார்க்கம் என்று நினைத்து பழகிப்போன சில பகுதி மக்கள், பூரியான் ஃபாத்திஹாவுடன் சேர்ந்த 'விறகு வெட்டி கிஸ்ஸா'வை விடிய விடியப் படிப்பதும், கேட்பதும்கூட வணக்கம் என்று எண்ணி, அதைக் கேட்பதற்காக பக்தி பரவசத்துடன் இரவெல்லாம் கண்விழித்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது?
இவையனைத்தும் தங்களைப் பணக்காரர்களாக ஆக்கிவிடும் என்ற எண்ணத்தில் செய்யும் இந்த மூடப்பழக்கத்திற்கும் இஸ்லாத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? நிதானமாக சிந்தித்துப் பாருங்கள் சகோதர, சகோதரிகளே!
என்னருமை இஸ்லாமிய சொந்தங்களே! திருக்குர்ஆனும் ஏராளமான நபிமொழிகளும் தமிழ் மொழியில் எப்போதோ வந்துவிட்டன. தயவுசெய்து அதைப் படித்துப் பாருங்கள்.அவற்றைப் படித்து, நீங்கள் சிந்திக்கத் துவங்கிவிட்டால், பூரியானுக்காக‌ ஃபாத்திஹா ஓத வருபவர்களுக்கு இனி பூசைதான் கொடுப்பீர்கள்.]
இஸ்லாத்தின் பெயரால் அரங்கேறும் மூட நம்பிக்கைகள் ஒவ்வொன்றும் மக்களிடம் தெளிவாக்கப்பட்டு, அதன் மூலம் இஸ்லாமிய சமுதாயத்தை உண்மையான இஸ்லாத்தின் வழியில் வாழவைக்க, ஏகத்துவக் கொள்கையுடைய மார்க்க அறிஞர்கள் மேற்கொண்ட‌ முயற்சியில் இறைவன் உதவியால் மிகப்பெரிய மாற்ற‌ம் இஸ்லாமியர்களிடையே ஏற்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்! ஆயினும் எல்லா இஸ்லாமிய மக்களையும் அப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளிலிருந்து இன்னும் முழுமையான அளவில் வென்றெடுக்கவில்லை என்பது வருத்தமான ஒரு உண்மைதான்.
இஸ்லாமிய மாதங்களில் இப்போது நடந்துக் கொண்டிருக்கும் மாதம் 'ரஜப்' மாதமாகும். இந்த மாதத்தில் சில இஸ்லாமியர்கள் மூட நம்பிக்கைகளை வணக்கமாக செய்துவருகிறார்கள். அவற்றில் ஒன்றுதான் தங்களுக்கு செல்வம் கொழிக்கவேண்டும் என்பதற்காக மூட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வணக்கமான(?) 'பூரியான் ஃபாத்திஹா' என்று சொல்லப்படும் ஒன்றாகும்.
ஷியாக்களின் 12 இமாம்களில் ஒருவரான 'ஜாஃபர் சாதிக்' என்பவரின் பெயரை முன்னிறுத்தி, இந்த ரஜப் மாதம் 22 வது பிறையில் 'பூரியான் ஃபாத்திஹா'வை ஓதுவதற்காக வீட்டின் ஒரு அறையை பிரத்தியேகமாக கழுவி சுத்தம் செய்து, மேலே வெள்ளைத் துணியினால் பந்தல் அமைத்து, அதில் பூக்களைத் தொங்கவிட்டு அலங்கரித்தவுடன் அந்த அறைக்கே ஒரு புனிதம் வந்துவிட்டதாக எண்ணி, ஃபாத்திஹா ஓதி முடிக்கும்வரை யாரையும் உள்ளேகூட அனுமதிக்கமாட்டார்கள்! (ஓதுபவர்கள் மட்டும் உள்ளே செல்லலாம்). தயாரித்து வைத்துள்ள பூரியான்களில் 22 பூரியான்கள் மட்டும் ஓதுவதற்காக (படைப்பதற்காக) வைக்கப்படும்.
வணக்கம் என்ற பெயரில் அல்லாஹ்வும் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களும் காட்டித்தராத ஒன்றை சிந்தித்து சுயமாக உருவாக்கிக் கொண்டு, அதன்மூலம் நன்மையை அடைந்து விடலாம் என்ற தவறான எண்ண‌த்தில் இவ்வாறு ஏதேனும் ஒரு புதுமையை மக்கள் அவ்வப்போது நிறைவேற்றுகிறார்கள். அதிலும் 'சீரணி/நார்ஸா' என்ற பெயரில் அதற்கு வகை வகையான காம்பினேஷன் கொண்ட உணவு வகைகளும், பதார்த்தங்களும் வேறு! ஃபாத்திஹா முடிந்தவுடன் அவற்றை ஓதியவர்களுக்கும் அதை ஏற்பாடு செய்தவர்களுக்கும் (பயபக்தியுடன்) 'ரவா கஞ்சி' என்ற பாயசத்துடன் பூரியான் பரிமாறப்படும்.
சில பகுதிகளில் இவற்றிற்கு பதிலாக‌ 'கீர் பூரி'யும் 'கோடா கஞ்சி'யும் படைப்பதற்கு வைத்திருப்பார்கள். (ஒருவேளை 'இவற்றில் நன்மை' என்று சொல்வதில் 'நாவிற்கும் நன்மை' என்று அர்த்தமும் உள்ளதோ? இந்த ஃபாத்திஹாவில் பூரியான் மட்டும் இல்லாவிட்டால் அதை ஓதுவதற்கு ஆலிம்கள் யாரும் வருவார்களா பாருங்கள்? 'பூரியானைப் பாத்தியா?' என்று தனக்குள் முதலில் கேட்டுக்கொண்டுதான் வந்து ஓதுவார்கள்.)
அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லியவை மட்டுமே மார்க்கம் என்பதை அறியாமல், கற்பனைக் கதைகளையே மார்க்கம் என்று நினைத்து பழகிப்போன சில பகுதி மக்கள், பூரியான் ஃபாத்திஹாவுடன் சேர்ந்த 'விறகு வெட்டி கிஸ்ஸா'வை விடிய விடியப் படிப்பதும், கேட்பதும்கூட வணக்கம் என்று எண்ணி, அதைக் கேட்பதற்காக பக்தி பரவசத்துடன் இரவெல்லாம் கண்விழித்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது? இவையனைத்தும் தங்களைப் பணக்காரர்களாக ஆக்கிவிடும் என்ற எண்ணத்தில் செய்யும் இந்த மூடப்பழக்கத்திற்கும் இஸ்லாத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? நிதானமாக சிந்தித்துப் பாருங்கள் சகோதர, சகோதரிகளே!
நீங்கள் உண்மை இஸ்லாத்தை சிந்திக்காமலும் உங்களை திருத்திக் கொள்ளாமலும் இருந்தால் அதனால் யாருக்கு நஷ்டம்... உங்களுக்குதானே? பூரியான் பாத்திஹா செய்வதால் உண்மையிலேயே ஒருவருக்கு செல்வம் வரும் என்றிருந்தால் ஏன் உங்கள் வீட்டு ஆண்களை வேலைக்கு அனுப்புகிறீர்கள்? பல ஆயிரங்கள் செலவு செய்து, உங்களைப் பிரிந்து ஏன் வெளிநாடுகளுக்கு அவர்கள் செல்லவேண்டும்? நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் பூரியான் தயாரித்து, பாத்திஹா ஓதி செல்வத்தை தலைவழிய‌ கொட்டச் செய்யலாமே? ஆனால், பூரியான் பாத்திஹாவிற்காக‌ கடன்பட்டும், கஷ்டப்பட்டும் அதை நிறைவேற்றுபவர்கள் எத்தனையோ பேர்!
காலமெல்லாம் ஓதிவிட்டோமே என்பதற்காகவும், இதை விட்டால் இன்னும் மோசமான நிலைக்கு ஆகிவிடுவோமோ என்று அஞ்சியும் கடன் வாங்கியாவது தொடர்ந்து ஓதிக் கொண்டிருப்பவர்களும் உண்டு. அதேபோல், இதை நடத்தாமலேயே பணக்காரர்களாக‌ ஆனவர்களும் உண்டு. இல்லையென்று சொல்லமுடியுமா? ஆக, பணக்காரர்களாக ஆக‌வேண்டுமென்று இந்த‌ பூரியான் பாத்திஹாவுக்காக பணத்தை செலவு செய்தவர்களும், அதை ஓதவென்று வீடு வீடாகச் சென்றவர்களும் அதனால் பணக்காரர்களாக ஆக‌வில்லை. அப்படியே அவர்களுக்கு எப்படியோ வசதி வாய்ப்பு ஏற்பட்டு செல்வந்த‌ர்களாக‌ ஆகியிருந்தாலும் அது பூரியான் ஃபாத்திஹாவின் புண்ணியத்தால்தான் என்று யாரேனும் நம்பிக்கை வைத்தால், அவர்களின் 'ஈமான்' என்ற இறைநம்பிக்கையே பாழாகி, இஸ்லாத்தை விட்டும் அவர்கள் வெளியேறிவர்களாக ஆகிறார்கள். ஏனெனில், செல்வத்தைத் தருபவனும் அல்லாஹ்தான், அதை தடுத்து வைத்திருப்பவனும் அல்லாஹ்தான். அல்லாஹ் மீது வைக்கவேண்டிய இந்த நம்பிக்கை தடம் மாறினால்..?(அல்லாஹ்தான் நம்மை காப்பாற்றணும்!) தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தை கொடுக்கிறான். தான் நாடியோருக்குக் குறைக்கிறான். இதுபற்றி அல்லாஹ்தஆலா, திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்களில் 'தான் நாடியோருக்கு செல்வத்தை வழங்குவதாக' கூறுகிறான்.
"அல்லாஹ் தான் நாடியவருக்கு ஏராளமாகக் கொடுக்கிறான். (தான் நாடியவருக்கு) அளவோடு கொடுக்கிறான்.எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் அற்பமேயன்றி வேறில்லை". (அல்குர்ஆன் 13:26)
"நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான். ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்தபோதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான். மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்" என்று (நபியே) நீர் கூறும். (34:39)
ஆனால் இந்த‌ 'பூரியான் ஃபாத்திஹா'வைப் பொருத்தவரை குறுகிய காலத்தில் செல்வந்தராவதற்காக மாற்று மதத்தவர்கள் செய்யும் 'லட்சுமி பூஜை'யைக் காப்பி அடித்ததாக இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. மூட நம்பிக்கையையும், கண்மூடிப் பின்பற்றும் மடமையையும் ஒழிக்க வந்த பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்துக்கொண்டு, 'முன்னோர்கள் சொன்ன வழிமுறை' என்று அதே இஸ்லாத்தின் பெயராலேயே நாம் அத்தகைய மூடச்செயல்களை செய்துக் கொண்டிருக்கலாமா? இது உங்களுக்கு கைசேதமில்லையா? இதுபோன்ற ஒரு வணக்க‌த்தை அல்லாஹ் நமக்கு கட்டளையிட்டுள்ளானா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள்தான் இதுபோன்று நமக்குக் கற்றுத்தந்தார்களா? அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கற்றுத்தந்த‌ வழிமுறை அல்லாமல் முன்னோர்கள் செய்தவைகள் என்றோ, காலம் காலமாக நடைமுறையில் வந்தவை என்றோ நாம் ஒன்றை செய்வோமேயானால் நாளை மறுமையில் அவற்றிற்கு எந்த பல‌னும் கிடைக்காது என்பது மட்டுமல்ல, மார்க்கத்தில் சொல்லாத புதுமையை ஏற்படுத்திய குற்றத்திற்காக தண்டனைதான் கிடைக்கும்.
இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ''வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம்; நடைமுறையில் சிறந்தது நபி(ஸல்)அவர்களின் நடைமுறை; காரியங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை (பித்அத்); பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்கும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' (நூல்: புகாரி)
ஆகவே என்னருமை இஸ்லாமிய சொந்தங்களே! திருக்குர்ஆனும் ஏராளமான நபிமொழிகளும் தமிழ் மொழியில் எப்போதோ வந்துவிட்டன. தயவுசெய்து அதைப் படித்துப் பாருங்கள். அவற்றைப் படித்து, நீங்கள் சிந்திக்கத் துவங்கிவிட்டால், பூரியானுக்காக‌ பாத்திஹா ஓத வருபவர்களுக்கு இனி பூசைதான் கொடுப்பீர்கள்.
வணக்கம் என்று சொல்லி இன்னும் இதுபோன்ற ஏராளமான‌ மூட நம்பிக்கைகளாலும் வழிகேடுகளாலும் உங்கள் பணத்தை சாப்பிட்டு பொருளாதார சுரண்டல் பண்ணிய‌வர்களை/உங்கள் மறுமை வாழ்வை பாழாக்க வருபவ‌ர்களை நீங்களே திருத்த முன்வாருங்கள்.
இத்தகைய வழிகேடுகள், தான் காணும் கட்டுக் கதைகளை எல்லாம் தங்கள் இஷ்டம்போலக் கூறி, மக்களை வழக்கம்போல் நம்பவைத்து ஏமாற்றி, ஓசியில் தங்கள் வயிறு வளர்க்க சிலர் உருவாக்கியவைதான் என்பதை புரிந்துக் கொண்டு, சிறிதும் தாமதிக்காமல் உங்களை நபிவழியின் பக்கம் மாற்றிக்கொண்டு நேரான வழியில் செல்லுங்கள். ஏனெனில் மரணம் என்பது எப்போது, எந்த நொடியில் நம்மை வந்தடையும் என்பது நம் யாருக்குமே தெரியாது. அதற்குமுன் நாம் திருந்திக் கொண்டாலே தவிர, வழிதவறி வாழ்ந்துக் கொண்டிருக்கும் நிலையில் மரணம் சம்பவித்தால் வல்ல இறைவனின் தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. அல்லாஹ் நம்மைக் காப்பானாக! நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக! நேர்வழியில் இருப்போரை அதைவிட்டும் தடம் புரண்டுவிடாமல் காப்பானாக

0 comments:

Post a Comment