widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Sunday, August 21, 2011

ஈமான் எனும் இறைநம்பிக்கை -ஹதீஸ் 26-30 From Buhari Shareef


26. 'செயல்களில் சிறந்தது எது?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது' என்றார்கள். 'பின்னர் எது?' என வினவப்பட்டதற்கு, 'இறைவழியில் போரிடுதல்' என்றார்கள். 'பின்னர் எது?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அங்கீகரிக்கப்படும் ஹஜ்' என்றார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
27. 'நபி(ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்தபோது, நபி(ஸல்) ஒரு குழுவினருக்குக் கொடுத்தார்கள். ஒருவரைவிட்டுவிட்டார்கள். அவர் எனக்கு மிகவும் வேண்டியவராவார். அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! ஏன் அவரைவிட்டு விட்டீர்கள்? அல்லாஹ்வின் மீது ஆணையாக அவரை நான் இறைநம்பிக்கையாளர் என்றே கருதுகிறேன்' என கேட்டதற்கு, 'அவரை முஸ்லிம் என்றும் சொல்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்." சிறிது நேரம் நான் மவுனமாக இருந்தேன். தொடர்ந்து நான் அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயத்தை என்னையும் மீறி மீண்டும் மீண்டும் கூறினேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பழைய பதிலையே கூறிவிட்டு, 'ஸஅதே! நான் ஒரு மனிதருக்குக் கொடுக்கிறேன்; ஆனால் நான் கொடுக்காதவர் என்னிடம் மிக நேசமானவராக இருக்கிறார். (அவருக்கு நான் கொடுத்ததற்கு) காரணம், ஏதும் கொடுக்காதிருந்தால் (குற்றம் இழைத்து அதனால்) அவரை இறைவன் நரகில் முகம் குப்புறத் தள்ளி விடுவானோ என்ற அச்சம் தான்' என்றார்கள்" என ஸஅத்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
28. 'ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது?' என்று கேட்டார். 'நீர் உணவளிப்பதும், அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
29. 'எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, 'இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?' எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்தது, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்' என்றார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
30. 'நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அரும்லுள்ள) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: 'அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்" என அபூதர் கூறினார்" என மஃரூர் கூறினார்.
Volume :1 Book :2

0 comments:

Post a Comment