widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Wednesday, July 20, 2011

வீடு குடி புகுதல் சடங்குகள் உண்டா?


வீடு குடி புகுதல் சடங்குகள் உண்டா?
வீடு குடி போவதற்கென்று எந்த சடங்கும் இஸ்லாத்தில் இல்லை. வீட்டை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்தி "இறைவனின் பெயரால்.." உள்ளே நுழைய வேண்டியதுதான்.
வீடு கட்டி குடி போவதென்பது ஒரு மன நிறைவான மகிழ்சிகரமான காரியமாகும். இப்படி ஒரு மன நிறைவையும் மகிழ்சியையும் கொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்ட முஸ்லிம்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எப்படியும் ஏதாவது சடங்கு செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். அந்த சடங்குகளின் வரிசையை தான்பாத்திஹா ஓதுவது பால் காய்ச்சுவது என்று தொடர்கின்றது
நம் பெண்கள் பால் காய்ச்சுவதற்கு ஒரு தத்துவம் வேறு சொல்வார்கள். புது வீட்டில் பால் காய்ச்சி குடி புகுந்தால் பால் பொங்குவது போன்று செல்வம் பொங்குமாம் (பொங்கல் கொண்டாடி குடி புகுகிறார்கள் என்பது புரிகிறதா...) சரி அதையாவது உருப்படியாக செய்கிறார்களா என்றால் இல்லை. பால் பொங்கி வரும் போது அதன் தலையில் தண்ணீரை தெளித்து பொங்குவதை (பொங்கலை)அடக்கி விடுகிறார்கள். (இந்த வீட்டில் மகிழ்சிப் பொங்கி அடங்கி விடட்டும் என்பது இதன் அர்த்தமோ..)
என்னவோ எந்த வீட்டிலும் பால் காய்ச்சப்படாத மாதிரியும் புது வீடுகளில் மட்டும் தான் அது நடப்பது போன்றும் புது வீடுகளில் மட்டும் தான் பால் பொங்குவது போன்றும் (பழைய வீடுகளில் காய்ச்சப்படும் பாலெல்லாம் பொங்காதா) அர்த்தமற்ற நம்பிக்கையை வளர்த்து வைத்துள்ளார்கள். டீ கடைகளில் ஒரு நாளைக்கு பலமுறை பால் பொங்குகிறது பல ஆண்டுகளாக எத்துனையோ டீ கடைகள் டீ கடைகளாகவே இருப்பதைப் பார்த்து வருகிறோம்.
எனவே வீடு குடி போக பால் காய்ச்சுவது என்பது இஸ்லாத்தில் இல்லாத அறிவுக்குப் பொருந்தாத காரியமாகும் அதனால் அதை தவிர்க்க வேண்டும். இத்தகைய சடங்கை சார்ந்ததுதான் பாத்திஹா ஓதுவதும்.
எத்துனையோ மக்கள் வீடில்லாமல் பிளாட்பாரங்களில் வாழ்க்கையை ஓட்டும் போது, சொந்த வீட்டுக் கான ஏக்கங்களுடன் ஆயிரக்கணக்கான மக்கள் வாடகை கட்டிடங்களில் குடி இருக்கும் போது சொந்தமாக வீடு கட்டி குடி போகுபவர்கள் இறைவனுக்கு நிறைய நன்றிச் சொல்லக் கடமைப் பட்டுள்ளார்கள்.
'இறைவன் உங்களுக்கு உங்கள் வீடுகளில் மன அமைதியையும் ஓய்வையும் ஏற்படுத்தியுள்ளான்' (அல் குர்ஆன் 16:80)
'உங்கள் வீடுகளில் மன அமைதி' என்ற வார்த்தையில் உங்கள் வீடு என்பது நிச்சயம் சொந்த வீட்டை குறிப்பதாகவே இருக்கும். சொந்த வீட்டில் கிடைக்கும் மன அமைதி வேறு எங்கும் கிடைக்காது என்பதை நாமெல்லாம் அனுபவப் பூர்வமாக வாழ்க்கையில் உணர்கிறோம். அப்படிப்பட்ட அமைதியை இறைவன் சொந்த இல்லங்களில் ஏற்படுத்திக் கொடுப்பதால் சொந்த வீடைப் பெற்றவர்கள் அவனுக்கு நிறைய நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளார்கள்.
அந்த நன்றி என்பது பால் காய்ச்சுவதிலும் பாத்திஹா ஓதுவதிலும் இல்லை. மூட சடங்குகள் அது சார்ந்த நம்பிக்கைகள் எல்லாவற்றையும் துடைத்தெறிந்து பெண்கள் ஐவேளையும் தொழும் இல்லமாக, தினமும் இறை வேதம் ஓதப்படும் இல்லமாக, எந்த நேரமும் இறைவனை நினைவுக் கூறக்கூடிய இல்லமாக, பிறருக்கு இறைவனின் நினைவை ஊட்டக் கூடிய இல்லமாக நம் இல்லங்கள் மாறுவதுதான் அவனுக்கு நன்றி செலுத்துவதற்குறிய சரியான அடையாளங்களாகும்.
வீடு குடிப்போவதற்கென்று இஸ்லாத்தில் எந்த ஒரு விஷேஷ நிகழ்சியும் இல்லை. பிஸ்மில்லாஹ் சொல்லி உடன் வருபவர்களுடன் ஸலாமை (சாந்தி வாழ்த்தை) பரிமாறிக் கொண்டு நுழைந்து விட வேண்டியது தான்.
கடன்பட வேண்டி இல்லாமல் மேலதிகமாக வசதி வாய்ப்புகள் இருந்தால் சொந்த வீட்டு மகிழ்சியை பிறருடன் பகிர்ந்துக் கொள்வதற்காக விருந்துக்கு ஏற்பாடு செய்யலாம்.
விருந்துக்கு அழைப்பு விடலாம் என அனுமதிக்கும் ஹதீஸ். (அதோடு இந்த ஹதீஸிலிருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய மேலதிக விளக்கத்தையும் கொடுத்துள்ளோம்)
(எனக்கும், ஏனைய நபிமார்களுக்கும் உள்ள உவமையாவது செல்வந்தன் ஒருவன் ஒருமாளிகையை எழுப்பி முழுமைப்படுத்தினான் ஒரு செங்கல் இடத்தைத் தவிர, அதை அழகுற அமைத்தான். அந்த வீட்டில் விருந்துக்கு நுழைந்த மக்கள் அதன் அழகையும், கலையுணர்வையும் கண்டு அதிசயித்தார்கள். ஒரு செங்கல் மட்டும் குறையுள்ளதே அதுவும் இருந்தால் முழுமைப் பெற்றிருக்குமே.. எனக்கூறினார்கள். அந்தக்கல் நான்தான்;. (என்மூலமாக அல்லாஹ் அந்த வீட்டை- இஸ்லாத்தை-முழமைப்படுத்தி விட்டான்). அபுஹூரைரா, ஜாபிர் பின் அப்தல்லாஹ், உபை, ஆகியதோழர்கள் அறிவிக்கும் இந்நபிமொழி புகாரி, முஸ்லிம், திர்மிதி ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய வருகையை நபிமார்களின் முடிவுரையை - இப்படி உவமையாக கூறியுள்ளார்கள். நபித்துவ முழுமைக்காக இந்த உவமைக் கூறப்பட்டாலும் இங்கு சொல்லப்பட்ட வார்த்தைகளை ஆழ்ந்து சிந்திக்கும் போது நிறைய படிப்பினைகள் இருக்கின்றன. நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் தம் பிரச்சாரத்தை துவங்கும்போது அந்த பாலைவனம் வரண்டு கிடந்தது என்னவோ உண்மைதான், இருந்தாலும் அங்கு வாழ்ந்த மக்களிடம் மூடநம்பிக்கைகள் மிக செழுமையாக தழைத் தோங்கி வளர்ந்திருந்தன. குலம், மொழி, இருப்பிடம், உடற்கூறுகள் என்று அறியாமை வாதங்கள் இருந்ததுபோலவே அவர்களின் 'ஆன்மீக பாதை' முழுதும் மூட முட்கள் பரப்பப்பட்டிருந்தன.
வான வெளியில் நடக்கும் யதார்த்த நிகழ்வுகளுக்கெல்லாம் மூட காரணங்கள் கற்பித்தார்கள். புகாரி, முஸ்லிம், நஸயி, திர்மிதி போன்ற வரலாற்று நபிவழி நூல்களில், எம்மக்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருத்தினார்களோ அம்மக்களின் பழைய நிலைப்பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மக்களிடம்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாத்தை அதன் பழமையான - பகுத்தறிவு எழுச்சிமிக்க - வடிவில் போதித்தார்கள். குர்ஆனுடைய வாதங்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சொல்வீச்சும், அம் மக்களிடம் இருந்த கலப்படமான ஆன்மீக நம்பிக்கைகளையும், ஏற்றிபோற்றப்பட்ட மூட வாதங்களையும் தவிடுபொடியாக்கின.
கணக்கிலடங்கா மிகப்பெரிய செல்வந்தனான அல்லாஹ் கட்டிய பெரும் இந்த இஸ்லாமிய மாளிகையை நோக்கி அதன் அழைப்பாளராக ஏவப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழைப்பை ஏற்று அந்த இல்லத்தில் நுழைந்தவர்கள் அங்குள்ள வசதி வாய்ப்பையும், கலையழகையும் கண்டு வாய்பிளந்து வியந்துதான் போனார்கள். இந்த வியப்பின் தாக்கம் இத்தாலியையும், பாரசீகத்தையும், இந்தியாவையும் கூட குறுகிய காலத்தில் எட்டியது. மக்காவில் அஸ்திவாரம் போடப்பட்ட இந்த இஸ்லாமிய வீட்டின் வசதி அன்றைய உலகில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் உலகலாவிய அளவிற்கு அந்த வீடு விஸ்தீரணபடுத்தப்பட்டது.
வீட்டின் அவசியத்தை உணராத, அது தேவையில்லை என்று சொல்லக்கூடிய ஒரே ஒரு மனிதரைக்கூட நாம் உலகில் பார்க்க முடியாது.
செல்லுலர், இன்டர்நெட் என்று உலக பொருளாதார பெருக்கு சாதனங்களை கையில் வைத்துக்கொண்டு பணம் பண்ணும் பில்லியனர்கள் முதல் அன்றாட காய்ச்சிகள் வரை எல்லோருக்கும் மிக அவசிய தேவை வீடு. 'எவ்வளவு தான் நாம் போகுமிடங்களில் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் திரும்பியதும்நம், நம்வீட்டில் கிடைக்கக்கூடிய அமைதியும், சுகமும் வேறெங்கே இருக்கு..' என்ற அந்த உள்ளப்பூர்வமான வார்த்தைகள் - அவர்கள் வாழ்வது குடிசை வீடாக இருந்தாலும்-வீட்டின் அவசியத்தை உணர்த்துகிறது. மனித வாழ்க்கையிலிருந்து தவிர்க்க முடியாத வாழ்வாதார இடமாகிய வீட்டை, தாம்போதித்த வாழ்வாதார கொள்கைக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
உதாரணமாக கூறுகிறார்கள்.
மழை, வெய்யில், புயல், பனி, கடும்காற்று என்று இயற்கை சீற்றங்களிலிருந்து வீடு மனிதனை எப்படி பாதுகாக்கிறதோ அதேபோன்று ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, ஜாதிஇழிவு, பாலியல்கொடுமைகள், மானபறிப்பு,
போன்ற மனித விரோத சீற்றங்களிலிருந்து ஒருவன் - ஒருவள் பாதுகாப்புப் பெறவேண்டுமானால் இஸ்லாமிய வீட்டில் குடியேறுவதைத்தவிர, இஸ்லாத்தை தம் சொந்த வீடாக்கிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.
இந்த வீட்டுடைய ஒளி அமைப்பை பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கும் போது 'நான் வெள்ளை வெளேர் என்ற நிலையில் இந்த மார்க்கத்தை விட்டு செல்கிறேன்.இதன் இரவுகூட பகலைப்போன்றது..' (நூல்,
முஸ்லிம்) என்று கூறியுள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விருந்தழைப்பை ஏற்று அன்று இந்த வீட்டில் நுழைந்தவர்கள் உலகை, அதன் மக்களை புதிய புத்துணர்ச்சியுடன் உருவாக்கமுடிந்தது. மனிதன் மீது மனிதன் செலுத்தும் ஆளமைகளெல்லாம் அறுத்தெறியப்பட்டு மனிதனை விட கீழான படைப்புகளெல்லாம் அவனை ஆட்டிப்படைத்த அடிமைத்தலைகள் கிழித்தெறியப்பட்டு புதியதோர் உலகைப்படைக்க முடிந்தது.
மாறாத, மங்காத அதே ஒளி வெள்ளத்தில் மிதக்கும் அந்த வீட்டுக்கு சொந்தம் கொண்டாடும் இன்றைய மக்கள் - முஸ்லிம்களின்- நிலைபரிதாபம்.
இஸ்லாம் எவ்வளவு ஒளிமயமாக இருந்தும் அதில் குடியேறியவர்கள் குருடர்களாகி போய்விட்டதால் இவர்களின் வாழ்க்கை இருண்டு கிடக்கிறது. இதயத்தில் இருளை பரவவிட்டு இந்த இல்லத்திற்கு பேய் இல்லம் என்று பெயர் சூட்டுகிறார்கள். இஸ்லாத்தில் பேய்கள் உண்டாம், ஆவிகளின் அராஜகம் உண்டாம், மாய மந்திர சடங்குகள் இந்த வீட்டுக்கு தேவையாம், தன்னிகரற்ற ஓரிறை சக்தியிடம் மட்டும் சரணாகதி அடைவது போதவில்லையாம், ஆயிரம் இறை சக்தியாளர்கள் உண்டாம், அவர்களை திருப்திப்படுத்த கூடு, கொடி, உரூஸ், நாட்டியம், ஆடல், பாடல், தட்சணை என்று தின பூஜை செய்யவேண்டுமாம், இந்த வீட்டில் வாழ்வதற்குவசதி போதவில்லையாம், கட்டுமான பணிகளில் குறையுள்ளதாம், பிற்காலத்தில் வந்த கட்டிட வல்லுனர்கள்தான் இந்த வீட்டை டெவலப் செய்தார்களாம்
என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், இந்த வீட்டின் அடிப்படையை உணராமல் உளறிக் கொட்டக்கூடியவர்களாகத் தான் இன்றைய இந்த வீட்டுக்கு சொந்தக்கார முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.
நெஞ்சில் நிறைந்த முஸ்லிம் சகோதர. சகோதரிகளே.. இப்படித்தான் இஸ்லாத்தை விளங்குவதா?
o நீங்கள் மிக நவீனமாக, கலையுணர்வுடன் ஒரு வீடு கட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மக்களை விருந்திற்கு அழைத்து அங்கேயே குடி அமர்த்துகிறீர்கள். உங்களிடம் விருந்துண்ட மக்கள் உங்கள் வீட்டை 'பேய் வீடு' என்கிறார்கள். இதை உங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா?
அல்லாஹ் கட்டிய இஸ்லாமிய வீட்டில் பேய், பிசாசு உண்டு என்கிறீர்களே.. இது அல்லாஹ்வை குறைப்படுத்தியதாகாதா..?
o உங்கள் வீட்டில் குடியேறியவர்கள் இந்த வீட்டின் மாடல் சரியில்லை என்கிறார்கள், 'ஆமாம், அப்படித்தான்' என்பீர்களா..? இறைவன் வகுத்த சட்டங்களால் மாடல் செய்யப்பட்ட இஸ்லாமிய வீட்டில், அந்த சட்டம் சரியில்லை, இந்த சட்டம் சரியில்லை என்று குறைக்கூறுகிறீர்களே!
மனதால் வெறுக்கிறீர்களே.. இது நியாயமா?
o உங்கள் வீட்டில் வசிப்பவர்கள் 'இது என்ன வீடு.. அறைக்கதவு எங்கென்று தெரியவில்லை, கூடத்திற்கு வழி எங்கே புரியவில்லை, பின் தோட்டத்திற்கு எப்படி செல்வது, சமையலறைக்கு வழி எங்கே.. எல்லாம் குழப்பமாக இருக்கு...' என்கிறார்கள். உடனே நீங்கள் 'சரியாகத்தான் சொன்னீங்க, வழிகளை புரிந்துக்கொள்ள முடியாத அளவிற்கு என் வீடு குழப்பம்தான்..' என்று ஆதரிப்பீர்களா?
இறைவன் வகுத்த இஸ்லாமிய வீட்டில் அந்த வழி புரியவில்லை, இந்த வழி தெரியவில்லை என்கிறீர்களே.. முறையா?
o எல்லா வசதிகளுமிக்க உங்கள் வீட்டில் வாழ வந்தவர்கள் 'எங்களுக்கு வசதி போதவில்லை, இதை இடிக்கவேண்டும், அதை உடைக்க வேண்டும், புதிதாக கட்ட வேண்டும்.' என்கிறார்கள். உங்கள் அனுமதியில்லாமல் மாற்றமும் செய்கிறார்கள். மௌனமாக இதை பொருத்துக் கொள்வீர்களா?
இஸ்லாமிய வீட்டில் இறைவன் வகுத்த வணக்க வழிபாடுகள் போதாதென்று (கடமையாக்கப்பட்ட வணக்கங்களையே முறையாக நிறைவேற்றுவதில்லை என்பது தான் உண்மை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கற்றுத்தராத புதிய, புதிய வணக்கங்களை உருவாக்குகிறீர்களே.. இது இறைவனுக்கு எதிரான போக்கல்லவா?
மீண்டும் ஒரு முறை ஆரம்ப ஹதீஸை படித்து சிந்தியுங்கள். அந்த எழில்மிகு வீட்டில் நம் கைகளால் மாற்றங்கள் செய்ய மனம் வருமா..? பிறர் செய்தால் அதை ஏற்றுக்கொள்ள மனம் வருமா..? அந்த வீட்டில் அன்று குடியேறியவர்கள் அப்பழுக்கில்லாமல் அதை பாதுகாத்ததால்தான் அந்த வீடு அவர்களை உலகின் மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது. அதே வீட்டில் நாமும் இன்று வசிக்கிறோம், ஆனால் நமது நிலை..?
அறிவுப்பூர்வமாக இஸ்லாத்தை விளங்கி வாழும் முஸ்லிம்களான நம் வாழ்க்கையை மாற்றுவோம்;.
இஸ்லாத்தை நமது செயல்பாட்டின் மூலமாகவும்,பிரசாரத்தின் மூலமாகவும் பிறருக்கு எடுத்து சொல்ல தயாராகுவோம்.
இறைவன்மீது நம்பிக்கை வைத்து,இறைவனுக்கு பயந்து,இறைவனையே சார்ந்து நின்று, இறைவனுக்காகவே வாழ்வோம்.
இறைவன் பெரும் பாதுகாவலன்,பெரும் கொடையாளன் என்பதை நினைவில் நிறுத்துவோம்.
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

0 comments:

Post a Comment