widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, August 11, 2012


லைலதுல் கத்ரின் சிறப்புகள் – ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்…

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும் மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும் ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறைவரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)
முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன
அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலதுல் கத்ர் இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது  முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
- அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) / நூல்: புகாரி (35) -
லைலத்துல் கத்ர் எந்த நாள் ?
லைலத்துல்  கத்ர் இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந் தாலும் அது எந்த இரவு  என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்)  அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக  மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ர் இரவைப் பற்றி  அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்க ளில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். லைலதுல் கத்ர் இரவு பற்றி  நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள்  தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து)  அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமழான்  மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெறமுயற்சி செய்யுங்கள் என்றார்கள்
- அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி) / நூல்கள்: புகாரி (49) முஅத்தா (615) -
நபி  (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது  குறிப்பிட்ட இந்த இரவுதான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற  முடியாது. எனினும் லைலதுல் கத்ர் ரமழான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்  படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.
ரமழானில்  கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத்  தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) / நூல்கள்: புகாரி (2017) முஸ்லிம் (1997) -
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ர் இரவைப் பற்றிச் சொல்லும் போது அது  ரமழான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமழானில் கடைசிப் பத்தில்  தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று  அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமழானின் கடைசி இரவில்  (29) இருக்கும் என்று சொல்லி விட்டு யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்த வராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கூறினார்கள்.
- அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி) / நூல்: அஹ்மத் (20700) -
மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர் ரமழான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
லைலதுல் கத்ர் 27வது இரவா ?
லைலதுல்  கத்ர் இரவு ரமழானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகத்தான்  இருக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் பார்த்தோம். ஆனால்  ஹதீஸ்களைக் காணாத பொதுமக்கள் லைலதுல் கத்ர் இரவு ரமலான் 27வது இரவுதான் என்று முடிவு செய்து பெரிய விழாவாகக் கொண்டாகிறார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா என்பதை நாம் பார்ப்போம்.
லைலதுல் கத்ர் இரவானது இருபத்தேழாவது இரவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
- அறிவிப்பவர் : முஆவியா (ரலி) / நூல்: அபூதாவூத் (1178) -
இது போன்ற சில செய்திகளை அடிப்படையாக வைத்து சிலர் லைலத்துல் கத்ர் இரவு 27வது இரவு தான் என்று கூறுகின்றனர்.
இந்த  ஹதீஸ் மட்டும் வந்திருந்தால் நாம் 27வது இரவு தான் என்று முடிவு  செய்யலாம். ஆனால் இதற்கு மாற்றமாக நாம் முன்னர் குறிப்பிட்ட ஹதீஸில்  லைலத்துல் கத்ர் இரவு என்பது நபி (ஸல்) அவர்களுக்கே மறக்கடிக்கப்  பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிட்டு விட்டு கடைசிப்  பத்தின் ஒற்றை நாட்களில் அதை தேடிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள்  கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் 27 என்று குறிப்பிட்டுள்ளதுபோல் 23 என்றும்  வந்துள்ளது. அவற்றைப் பாருங்கள்.
ரமழான் மாதத்தில் தேடக் கூடிய இரவான லைலத்துல் கத்ரைப் பற்றி நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 23வது இரவு என்று பதிலளித்தார்கள்.
- அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) /நூல்: அஹ்மத் (15466) -
இதைப் போன்று 21, 23, 25 என்று மூன்று இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.
ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் லைலதுல் கத்ரை தேடுங்கள். லைலதுல் கத்ரை இருபத்தி ஒன்றாவது இரவில் இருபத்தி மூன்றாவது இரவில் இருபத்தி ஐந்தாவது இரவில் தேடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) / நூல்: புகாரி (2021) -
இதைப் போன்று 23, 29 இரவு என்று இரண்டு இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.
லைலதுல் கத்ர் இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளது. அதை இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ தேடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) / நூல்: புகாரி (2022) -
இப்படிப் பல்வேறு அறிவிப்புகள் வருவதன் சரியான கருத்து என்ன என்பதற்கு இமாம் ஷாஃபீ அவர்கள் தெளிவான விடையை கூறியுள்ளார்கள். இப்படிப் பலவாறாக நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு விளக்கம் அளித்த இமாம் ஷாஃபி அவர்கள் நபியவர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப பதில் கூறும் வழக்கம் உள்ளவர்கள். இந்த இரவில் நாங்கள் லைலத்துல் கத்ரைத் தேடலாமா என்று கேட்கும்போது அந்த இரவில் தேடுங்கள். என்று பதிலளித்திருப்பார்கள் என்று கூறுகிறார்கள்.
திர்மிதீ : 722
அதாவது ஒரு நபித்தோழர் 21வது இரவில் லைலத்துல் கத்ரை தேடலாமா என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம் 21 வது இரவில் தேடுங்கள் என்று கூறியிருப்பார்கள். இன்னொரு நபித்தோழர் 23வது இரவில் கத்ரை தேடலாமா என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம் 23வது இரவில் தேடுங்கள் என்று  கூறியிருப்பார்கள். இவ்வாறு ஐந்து ஒற்றைப்படை இரவுகளைப் பற்றியும்  கேட்டிருப்பார்கள். அதற்கு ஏற்றவாறு நபி (ஸல்) அவர்கள்  பதிலளித்திருப்பார்கள். எனவே ஐந்து ஒற்றைப்படை இரவுகள் பற்றியும்  ஹதீஸ்களில் இடம் பெற்று இருக்கிறது. இந்தக் கருத்தே மாறுபட்ட ஹதீஸ்கள்  வந்திருப்பதன் சரியான விளக்கமாகத் தெரிகிறது.
(மூலக் கட்டுரை: OnlinePJ.com)


0 comments:

Post a Comment