widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, February 4, 2012

மீலாது கொண்டாட்டம் ஓர் இஸ்லாமிய பார்வை



பிறத்தல், பிறந்த நேரம், பிறந்த இடம் போன்ற அர்த்தம் தரும் ‘மீலாது’ என்கின்ற பதப் பிரயோகம்,  ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்’என்ற பெயரில் ரபீஉல் அவ்வல் மாதத்தில் அரங்கேற்றப்படுகின்ற பண்டிகைக்கே முஸ்லிம்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
கழிப்பறை ஒழுக்கம் முதல் அரசாட்சி நடாத்துவது வரை தன்னிகரில்லா உயரிய வழிகாட்டலினை வழங்கி நிற்கும் இறைமார்க்கமாம் இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் மீலாது விழா குறித்து நோக்குவோம்.
பரிபூரணப்படுத்தப்பட்ட இறைமார்க்கம்
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (துல்ஹஜ் 10ஆம் நாளில் மக்காவில்) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது ‘இது எந்த நாள் என்பது உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டார்கள். மக்கள் ‘அழ்ழாஹ்வும், அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று கூறினார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணினோம். (அந்த அளவிற்கு மௌனமாக இருந்தார்கள்) பிறகு ‘இது ‘நஹ்ர்’ உடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா?’ என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்! அழ்ழாஹ்வின் தூதரே!’ என்று சொன்னோம். நபியவர்கள், ‘இது எந்த ஊர்? இது புனித நகரமல்லவா?’ என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்! அழ்ழாஹ்வின் தூதரே!’ என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின் (புனிதம் வாய்ந்த) உங்களது இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமான) இந்த மாதத்தில் இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும், உங்கள் செல்வங்களும், உங்களது மானமும், உங்கள் உடல்களும் உங்களுக்குப் புனிதமானவையே’ என்று கூறிவிட்டு, ‘(நான் வாழ்ந்த இதுகாலம் வரை உங்களிடம் இறைச் செய்திகள் அனைத்தையும்) தெரிவித்துவிட்டேனா’ எனக் கேட்டார்கள். நாங்கள் ‘ஆம் (தெரிவித்துவிட்டீர்கள்)’ என்று பதிலளித்தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் ‘இறைவா! நீயே சாட்சி என்று சொன்னார்கள்.’ பிறகு (மக்களிடம்) ‘இங்கு வந்திருப்பவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள். ஏனெனில், இச்செய்தியை(ப் பிறருக்கு)த் தெரிவிப்பவர்களில் எத்தனையோ பேர் தம்மைவிட அதை நன்கு நினைவிலிருத்திக் கொள்பவரிடம் தெரிவிக்கலாம் என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூபக்ரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-7078)
குறித்த ஆதாரபூர்வமான நபிமொழி அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மார்க்கத்தில் மிகச் சிறியதொரு விடயத்தைக் கூட விட்டு வைக்காது இறைச்செய்திகள் அனைத்தையும் எத்தி வைத்துவிட்டார்கள் எனக்கூறுகின்றது.
மீலாது, மௌலீது போன்ற அநாச்சாரங்கள், புதுவழிகள் மார்க்க அங்கீகாரம் பெற்ற விடயம் என ஒருவர் நம்புவாராயின் நபிகளார் (ஸல்) அவர்கள் தமது தூதுத்துவப் பணியை சரியாக நிறைவேற்றவில்லை எனவும், மீலாது, மௌலீது போன்ற மார்க்கத்தில் உள்ள விடயங்களை நபிகளார் (ஸல்) அவர்கள் சொல்லாது விட்டுவிட்டார்கள் என்பகவும் ஆகிவிடும். மேலும், அகிலத்தின் இரட்சகன் அழ்ழாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.
‘இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன்.’ (அல்குர்ஆன் 05:03)
மீலாது, மௌலீது போன்ற விடயங்கள் மார்க்க அம்சம்தான்  என வாதிடும் போது, மேலுள்ள திருமறை வசனத்தையும் மறுத்த பாவிகளாக ஆவதோடு, மார்க்கம் முழுமைப்படுத்தப்படாதது என்று கூறுகின்ற பெரும்பாவத்தில் ஈடுபட்டவர்களாகின்றோம். (இவ்வாறு வாதிடுவதிலிருந்து அழ்ழாஹ் எம்மனைவரையும் காப்பாற்றுவானாக!)
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பதன் அவசியம்
ஒரு முஸ்லிம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிக்காத வரை அவனுடைய ஈமான் பூரணமடையாது. இது குறித்து திருமறைக் குர்ஆன் பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.
‘நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்’  (அல்குர்ஆன் 33:06)
இது குறித்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில், ‘உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை,  ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆகமாட்டார் என்று  அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-15)
நபிகளாரை எவ்வாறு நேசிக்க வேண்டும்?
அழ்ழாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் ஒரு விடயத்தை மார்க்கம் என்று தீர்மானித்து விட்டால் அதில் கூட்டல், குறைத்தல் செய்யாது, சுன்னாக்களை சில்லறைகள் என்று கூறி அற்பமாகக் கருதாது வஹியை மாத்திரம் பின்பற்றுவதே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பதாக அமையும்.
திருமறைக் குர்ஆன் கூறுகின்றது. ‘நம்பிக்கை கொண்டோரே!  நீங்கள் அழ்ழாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அழ்ழாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்), உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அழ்ழாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும் மிக அழகிய விளக்கமுமாகும்.’  (அல்குர்ஆன் 4:59)
மேலும், அருள்மறையாம் திருமறை கூறுகின்றது.
‘நீங்கள் அழ்ழாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அழ்ழாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அழ்ழாஹ் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக!’ (அல்குர்ஆன் 3:31)
‘அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அழ்ழாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ‘செவியுற்றோம், கட்டுப்பட்டோம்’ என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.’ (அல்குர்ஆன் 24:51)
மீலாது விழாவின் தோற்றம்
இஸ்லாமிய வரலாற்றில், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலம் முதல் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு வரை மீலாத் விழா கொண்டாடப்படவில்லை. ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் தாங்கள் ‘பாத்திமா (ரழி) அவர்களின் பரம்பரையினர்’ எனப் போலியாக வாதிடக் கூடிய, அலி (ரழி) அவர்களே ‘நபித்துவத்திற்கு தகுதியானவரர்கள்’ என்றும், விரல் விட்டு எண்ணக் கூடிய சில நபித்தோழர்களை விட ஏனைய நபித்தோழர்களை காபிர்கள் எனவும் வாதிடக்கூடிய ‘பாத்திமிய்யாக்களினால்’  எகிப்தில் ஆட்சி நிறுவப்படுகின்றது. ‘அப்துல்லாஹ் பின் மைமூன் அல்கதாஹ்’ என்கின்ற யூதனின் சந்ததியினரே இவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மக்களை தம்பக்கம் கவர்வதற்காகவும், தமது ஆட்சி, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் பாத்திமிய்யாக்களின் நான்காவது ஆட்சியாளனான ‘அல்முயிஸ் லிதீனில்லா ஹில் உபைதி’ என்பவனால் அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் பெயரிலும், பாத்திமா (ரழி), அலி (ரழி), ஹுசைன் (ரழி), ஹஸன் (ரழி) ஆகியோரின் பெயரிலும், ஆட்சியாளர் ஹாழிர் (பாத்திமிய்யாக் களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஹிஜ்ரி 230ல் பிறந்து இன்று வரை மறைவாக உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்) என்பவர் பெயரிலும் மீலாத் விழா (பிறந்த நாள்)  கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றது.
எனவே, இந்த மீலாத் விழாக் கொண்டாட்டங்கள், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத்தான் தோற்றுவிக்கப் பட்டவையேயன்றி அழ்ழாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறை அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
பிற மதக் கலாசாரத்திற்கு ஒப்பாதல்
பிறந்த நாள் கொண்டாட்டம் இறைமார்க்கத்தில் வரம்புமீறிச் சென்ற கிறிஸ்துவ சமுதாயத்தினரின் கலாசாரமாகும்.
‘யார் பிற சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தை சார்ந்தவரே என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: அபூதாவுத்-4033)
மேற்படி நபிமொழியைப் படித்த பின்பாவது மீலாத் விழாவினை ஆதரிக்கக் கூடிய சகோதரர்கள் கிறிஸ்த்தவர்களுக்கு ஒப்பாகக் கூடிய மீலாத் விழா கொண்டாட்டத்தை விட்டொழிக்க முன் வர வேண்டும்.
மீலாது கொண்டாட்டம் வழிபாடல்ல! வழிகேடு!
சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் எவ்வித கூட்டலும், குறைத்தலும் இன்றி தனது தூதுத்துவப் பணியை மிகச் சரியாக நிறைவேற்றிய அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மீலாது கொண்டாட்டம் மார்க்கத்தில் உள்ள விடயமாக இருந்திருந்தால், நிச்சயமாக அதனை நமக்கு கற்றுத் தந்திருப்பார்கள். ஆனால், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கோ, தமக்கு முன்சென்ற இறைத் தூதர்களுக்கோ மீலாது விழாக் கொண்டாடவுமில்லை. கொண்டாடுமாறு கட்டளையிடவுமில்லை.
மேலும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் ‘சிறந்த தலைமுறை’ என சிலாகித்துக் கூறப்பட்ட உத்தம நபித்தோழர்கள் காலத்திலோ, அதற்கடுத்து வந்த தலைமுறையினர்களது காலத்திலோ மீலாது விழா என்கின்ற அநாச்சாரம் இருந்ததில்லை. இதோ அழ்ழாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
‘உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்.’ இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் இரண்டு தலைமுறைக்குப் பிறகு மூன்றாவதாக ஒரு தலைமுறையை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்களா என்று எனக்குத் தெரியாது என்று கூறுகிறார்கள்.(அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2651)
மீலாதும் நரக நெருப்பும்
மீலாத் விழாக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதானது இந்த மார்க்கத்தின் சொந்தக்காரனான அழ்ழாஹ்வுக்கே பாடம் கற்பிக்க முனைவதாகும். இதனையே திருமறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது.
‘உங்கள் மார்க்கத்தை அழ்ழாஹ் வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’ (அல்குர்ஆன் 49:16)
அகிலத்தின் இரட்சகன் அருளாளன் அழ்ழாஹ்விற்கும், அவனது அருமைத் தூதர் (ஸல்) அவர்களுக்கும் பாடம் கற்பிப்பது போன்று, (அழ்ழாஹ் இத்தகைய செயற்பாடுகளிலிருந்து எம்மைப் பாதுகாப்பானாக!) இஸ்லாத்தின் எதிரிகளால் உருவாக்கப்பட்ட மீலாது கொண்டாட்டம் எம்மை நிச்சயமாக கொழுந்து விட்டெறியும் நரக நெருப்பிலேயே கொண்டு போய்ச் சேர்க்கும்.
இதோ, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
‘செய்திகளில் மிகவும் உண்மையானது அழ்ழாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில்  கொண்டு சேர்க்கும்.’  (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: நஸயீ-1560)
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2697)
இன்று இம்மீலாத் விழாக் கொண்டாட்டங்கள் ஊர்மட்டங்களில் வழக்கொழிந்து போய்விட்டாலும் கூட பாடசாலை மட்டங்களில், இஸ்லாத்தின் இனிய போதனைகள் விதைக்கப்பட வேண்டிய மாணவப் பருவத்தினரின் பிஞ்சு நெஞ்சங்களில் மீலாது எனும் அநாச்சாரமும், அந்நிய சமூகங்கள் மீது, மோகத்தை ஏற்படுத்தும் இத்தீய கலாசாரமும் விதைக்கப்படுவதையிட்டு பொறுப்பாளர்களும், பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் மாணவ சமூகமும் விழிப்பாக இருக்க வேண்டும்.
இறுதியாக, மீலாத் விழாவை ஆதரிக்க கூடிய சகோதரர்களே! நீங்கள் உண்மையில் அழ்ழாஹ்வையும் அவனது தூதர் (ஸல்) அவர்களையும் நேசிக்க கூடியவர்களாயிருந்தால், இஸ்லாத்தின் எதிரிகளால் உருவாக்கப்பட்ட மீலாத் விழா போன்ற அனாச்சாரங்களை விட்டொழித்துவிட்டு, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை முறை எவ்வாறு இருந்தது? நோன்பு மற்றும் பெருநாள் வணக்கங்களில்  தூதர் (ஸல்) அவர்களது வழிமுறை எவ்வாறு இருந்தது? பிரார்த்தனையின் போது தூதரின் வழிமுறை எவ்வாறு இருந்தது? அன்றாட நடவடிக்கைகளில்  தூதர் (ஸல்) அவர்களது வழிமுறை எவ்வாறு இருந்தது? என வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அற்பமானது, சிறியது, பெரியது எனக் கருதாது அருள்மறைக் குர்ஆன், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் மூலம் அறிந்து பின்பற்றுவதனூடாக தூதர் (ஸல்) அவர்கள் மீதான உண்மையான நேசத்தை வெளிப்படுத்துவோமாக!
source: www.dharulathar.com

0 comments:

Post a Comment