widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, December 20, 2013

மறுமை நாள். சொர்க்கம் நரகம்

1773. மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடை கூட அவன் (மதிப்பு) பெறமாட்டான். ‘மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்கமாட்டோம்” எனும் (திருக்குர்ஆன் 18:105 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 4729 அபூஹுரைரா (ரலி).
1774. யூத அறிஞர்களில் ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘முஹம்மதே! அல்லாஹ், வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், இதரப் படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு,‘நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன்” என்று சொல்வான் என நாங்கள் (எங்களின் வேத நூலான தவ்ராத்தில்) கண்டோம்” என்று கூறினார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில், தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, ‘அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப் பிடியில் இருக்கும். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணைவைப்பவற்றிலிருந்து அவன் தூயவன்; உயர்ந்தவன்; எனும் (திருக்குர்ஆன் 39:67 வது) வசனத்தை ஓதினார்கள்.
புஹாரி 4811 இப்னு மஸ்ஊத் (ரலி).
1775. அல்லாஹ் (மறுமை நாளில்) பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தன்னுடைய வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு ‘நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?’ என்று கேட்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6519 அபூஹுரைரா (ரலி).
1776. அல்லாஹ் மறுமைநாளில் பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் இருக்கும். பிறகு ‘நானே அரசன்!” என்று சொல்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறைமறையின் பார்வையில் இவ்வுல வாழ்க்கை



இவ்விடத்தில் சற்று நேரம் நாம் தாமதிப்போம். இவ்வுலக வாழ்க்கை குறித்து குர்ஆனின் கண்ணோட்டம் என்ன என்று ஆராய்வோம். இந்த விஷயத்தில் குர்ஆனை முன்னிறுத்துவதும் அதனிடம் கருத்து கேட்பதும்தான் நமக்கு நல்லது.

ஏனெனில் இவ்வுல வாழ்வு குறித்து முஸ்லிம்களின் அறிவுகளும் சிந்தனைகளும் தடுமாறிப்போய் உள்ளன. இந்த வாழ்க்கையின் உண்மையான மதிப்பு என்ன, அந்தஸ்து என்ன என்பதில் ஆய்வாளர்களின் கருத்துகளும் சிதறிப் போய் உள்ளன!
குர்ஆன் மிகத் தெளிவாகவும் உறுதியுடனும் வெளிப்படையாகவும் அறிவித்துவிடுகிறது., இவ்வுலக வாழ்வின் தற்காலிகத்தையும் தாழ்வு நிலையையும் - மறுவுலகத்திற்கு எதிரில் அதன் மதிப்பின்மையையும்!
"உலக வாழ்க்கையின் இன்பங்கள் அனைத்தும் மறுமைக்கு எதிரில் எதுவுமே இல்லை, மிகச் சொற்பமே"(சூரத்துல் பராஆ 38)
"மேலும் இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் வேடிக்கையுமே அன்றி வேறில்லை. நிலையாக வாழ்வதற்கான இல்லம் மறுமை இல்லம்தான்! அந்தோ! இவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே!" (சூரத்துல் அன்கப+த் 64)
இன்னோர் இடத்தில்,
"நன்கு அறிந்துகொள்ளுங்கள்: இவ்வுலக வாழ்க்கை (மறுமைக்கு எதிரில்) விளையாட்டும் வேடிக்கையும் வெளிப்பகட்டும் மற்றும் உங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் பெருமையடித்துக் கொள்வதும், செல்வங்கள் - குழந்தைகள் ஆகியவற்றில் ஒருவரை ஒருவர் முந்திட முற்படுவதுமே அன்றி வேறில்லை. (இதன் உவமை) எவ்வாறெனில் மழை பொழிந்து, அதன் மூலம் விளைகிற தாவரங்களைப் பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைவது போன்றது! பின்னர் அவை உலர்ந்து விடுகின்றன. அவை மஞ்சணித்துப் போவதையும் பதராகிப் போவதையும் நீர் காண்கிறீர். (இதற்கு மாறாக) மறுமையி(ன் நிலை யாதெனி)ல் கடும் தண்டனை உண்டு. இறைவனின் மன்னிப்பும் உவப்பும் உண்டு. ஆனால் உலக வாழ்க்கை வெறும் ஏமாற்றுச் சாதனமே அன்றி வேறில்லை" (சூரத்துல் ஹதீத் 20)
மேலும் குர்ஆன் இவ்வாறே தெளிவாகவும் உறுதியுடனும் இவ்வுலவாழ்வு மறுமைக்கான பாலம் என்றும் பணியாற்றும் கால அவகாசம் என்றும் அறிவிக்கிறது.
மேலும் பல இடங்களில்!
"திண்ணமாக நாம் இப்ப+மியின் மீதுள்ள அனைத்தையும் இப்புவி (வாழ்வு)க்கு அலங்காரமாக ஆக்கியுள்ளோம்., இவர்களில் யார் மிகச் சிறந்த செயலைச் செய்பவர் என்று சோதித்துப் பார்ப்பதற்காக!" (சூரத்துல் கஹ்ஃப் 7)
வேறோர் இடத்தில்,
"அவனே மரணத்தையும் வாழ்கையும் படைத்தான்., உங்களில் யார் நல்லமல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக! மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன். பெரும் மன்னிப்பாளன்" (சூரத்துல் முல்க் 2)
மேலும் மறுமை வாழ்க்கையே சிறந்தது, நிலையானது என்று கூறுகிறது குர்ஆன்:
"உலக வாழ்க்கை என்பது விளையாட்டும் வேடிக்கையுமே தவிர வேறில்லை. உண்மையில் எவர்கள் தீய நடத்தையைத் தவிர்க்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு மறுமை இல்லைமே மிகச் சிறந்தது. (என்னே பரிதாபம்! இவ்வளவுகூட) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?" (சூரத்துல் அன்ஆம் 32)
மற்றோரிடத்தில்,
"உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பவை யாவும் உலக வாழ்வின் இன்பச் சாதனங்களும் அலங்காரமும் தான். ஆனால் அல்லாஹ்விடம் உள்ளதே மிகச் சிறந்ததும் நிலையானதுமாகும். (இதனைக் கூட) நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?" (சூரத்தல் கஸஸ் 60)
ஆகையால் தான் என்றென்றும் நிலையான, விரிவான, அசுத்தங்களை விட்டும் தூய்மையான, அபாயங்கள் இல்லாத மறுமை வாழ்க்கையைப் புறந்தள்ளிவிட்டு அழியுந்தன்மை கொண்ட, தற்காலிகமான, நிம்மதியில்லாத, நிலைபாடற்ற இவ்வுலக வாழ்வுக்கு முன்னுரிமை கொடுப்பவர்களை இகழ்கிறது., இழித்துரைக்கிறது குர்ஆன்!
"எவர்கள் நமது சந்திப்பை எதிர்பார்ப்பதில்லையோ மேலும் உலக வாழ்க்கையில் திருப்தி கொண்டு அதில் முழு நிம்மதியும் அடைந்தார்களோ மற்றும் எவர்கள் நம்முடைய சான்றுகள் குறித்து பராமுகமாக இருக்கிறார்களோ அத்தகையவர்களுக்கு (அவர்களின் தவறான கொள்கை - நடைமுறை மூலம்) அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீமைகளின் காரணமாக நரகம் தான் புகலிட(மாகக்கிடைக்)கும்" (சூரத்து ய+னுஸ் 7–8)
வேறோர் இடத்தில்,
"எவர்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் விரும்புகிறார்களோ அவர்களுக்கு, அவர்களின் செயல்களுக்கேற்ற கூலியை இங்கேயே நாம் நிறைவாக அளித்துவிடுகிறோம். அதில் அவர்களுக்கு எவ்விதக் குறைவும் செய்யப்பட மாட்டாது. ஆனால் இத்தகையவர்களுக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவும் இல்லை. உலகில் அவர்கள் உருவாக்கியவை அனைத்தும் அடியோடு அழிந்து போய் விட்டன (என்பதும்) அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்கள் அனைத்தும் வீணானவையே (என்பதும் அங்கு அவர்களுக்குப் புரிந்துவிடும்)" (சூரத்து ஹ_த் 15 -16)
வேறோர் இடத்தில்,
"சத்தியத்தை நிராகரித்தவர்களுக்குக் கடுமையான தண்டனையினால் அழிவு உள்ளது. அவர்கள் மறுவுலகத்தை விட இவ்வுலக வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். மேலும் அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாமல் (மக்களைத்) தடுக்கிறார்கள். அது (அவர்களின் விருப்பத்திற்கேற்ப) கோணலாகிவிட வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் வழிகோட்டில் வெகுதூரம் சென்று விட்டார்கள்" (சூரத்து இப்றாஹீம் 2 - 3 )
மற்றோர் இடத்தில்,
"இவர்கள் உலக வாழ்க்கையின் புறத்தோற்றத்தை மட்டுமே அறிகின்றனர். மறுவுலகத்தைப் பற்றி அவர்கள் அலட்சியமாக உள்ளனர்" (சூரத்துர் ரூம் 7)
வேறோர் இடத்தில்,
"எவன் நமது அறிவுரையைப் புறக்கணித்தானோ மேலும் உலக வாழ்;க்கையைத் தவிர வேறெந்தக் குறிக்கோளும் அவனுக்கு இல்லையோ அவனை அதே நிலையிலேயே விட்டுவிடுவீராக! -இப்படிப்பட்டவர்களுடைய அறிவின் எல்லை அவ்வளவுதான்! உம் இறைவனே நன்கு அறிபவன் தனது பாதையை விட்டு வழி பிறழ்ந்தவர் யார், நேர் வழியில் செல்பவர் யார் என்பதை!" (சூரத்துந் நஜ்ம் 29 -30)
இன்னோர் இடத்தில்,
"திண்ணமாக இவர்கள் உடனடியாகக் கிடைக்கக் கூடிய (உலகத்)தை நேசிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குப் பின்னால் வர விருக்கும் ஒரு கடினமான (மறுமை) நாளை அலட்சியமாக விட்டு விடுகிறார்கள்" (சூரத்தல் இன்ஸான் 27)
வேறோர் இடத்தில்,
"எவன் வரம்பு மீறினானோ மேலும் உலக வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுத்தானோ அவனுக்குத் திண்ணமாக நரகம் தான் புகலிடமாகும்" (சூரத்துந் நாஸியாத் 37–39)
ஆனால் இவ்வுலகின் நலனையும் மறுவுலகின் நலனையும் இரண்டையும் கருத்தில் கொண்டு அதே நேரத்தில் மறுவுலக வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன் உயர்வையும் சிறப்பையும் அந்தஸ்தையும் உணர்ந்து அதை அடைவதற்கு ஆர்வம் கொண்டு வாழ்பவர்கள் யாரோ அவர்களை குர்ஆன் புகழ்கிறது!
"மக்களில் இவ்வாறு பிரார்த்தனை செய்வோரும் உள்ளனர்: எங்கள் இறைவனே! எங்களுக்கு உலகத்திலேயே எல்லாம் வழங்கிவிடு - இத்தகையவருக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை. இன்னும் - எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மையைக் கொடு., மறுவுலகிலும் நன்மையைக் கொடு. மேலும் நரக வேதனையில் இருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக என்று கூறும் சிலரும் அவர்களில் உள்ளனர்!" (சூரத்துல் பகறா 200 – 201)
ஓரிடத்தில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்ததாகச் சொல்லிக் காட்டுகிறது குர்ஆன்:
" ....(இறைவா!) இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை எழுதி வைப்பாயாக. மறுமையிலும் நன்மையை அருள்வாயாக! திண்ணமாக நாங்கள் உன் பக்கமே திரும்பி விட்டோம்" (சூரத்துல் அஃராஃப் 156)
ஓரிடத்தில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் புகழ்ந்துரைத்து அதன் மூலம் வழிகாட்டுகிறது:
"மேலும் இவ்வுலகிலும் அவருக்கு நன்மையை வழங்கினோம். திண்ணமாக அவர் மறுவுலகிலும் நல்லோர்களில் ஒருவராக இருப்பார்" (சூரத்துந் நஹ்ல் 122)

Wednesday, December 18, 2013

இறைநம்பிக்கையின் பலம்


நம்மை படைத்த அல்லாஹ் நாம் சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான். அதில் தலையாயது தான் அவன் மீது நாம் கொள்ள வேண்டிய நம்பிக்கை. அவனை மட்டுமே இறைவனாக ஏற்க வேண்டும் என்ற கட்டளை.
இஸ்லாத்தின் அடிப்படையாக இந்த இறைநம்பிக்கை உள்ளது.

எதற்காக? இந்த இறை நம்பிக்கை ஒருவன் மனதிற்கு சென்றுவிட்டால் அவன் அளப்பறிய சக்தியை பெறுகிறான். அல்லாஹ்வை தவிர வேறு எவருக்கு அஞ்சாததால் அவனது வாழ்க்கையில் எவ்வித சலனமும் இல்லை. அல்லாஹ்வின் மீதான அச்சம் இருப்பதால் அவனை கொண்டு மற்றவர்களுக்கு தொந்தரவுகள் எதுவும் இல்லை. இதனை தான் வரலாறு நமக்கு சொல்லித் தருகிறது.
இன்று நாமும் இறைநம்பிக்கை கொண்டுள்ளோம். நம்மில் பலருக்கு இந்த இறைநம்பிக்கை என்னும் பரிசு மிகவும் எளிதாக கிடைத்தது என்பதை மறுப்பதற்கில்லை. எளிதாக கிடைத்ததால் தான் என்னவோ நாம் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை போலும்! இதனால்தான் நமக்கு பல படிப்பினைகளை அல்லாஹ் சொல்லித் தருகிறான்.
குர்ஆனிலும் சான்றோர்களின் வாழ்க்கையிலும் இதற்கான பல ஆதாரங்கள் உள்ளன. ஆனால் குர்ஆனின் ஒரு சம்பவம் இறை நம்பிக்கையின் பலம், எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நமக்கு காட்டுகிறது.
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனின் செய்தியை பெற்றுக் கொண்டு அதனை அப்போதைய அரசனாக இருந்த ஃபிர்அவ்னிடம் கொண்டு செல்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தை மொத்தமாக வைத்து அனுபவித்து கொண்டிருப்பவனுக்கு அல்லாஹ் மட்டும்தான் கடவுள் என்பதை ஜீரனிக்க முடியவில்லை. ‘நீர் கொண்டு வந்திருக்கும் அத்தாட்சி எதையும் காட்டும்’ என்று முதலில் கேட்டான். மூஸா அலைஹிஸ்ஸலாம் தனது கைத்தடியை எறிந்தார். உடனே அது பெரிய பாம்பாகிவிட்டது. தனது கையை சட்டைப்பையில் இருந்து வெளியே எடுத்தார். அது பார்ப்பவர்களுக்கு வெண்மையாக இருந்தது.
ஃபிர்அவ்னின் மனது உண்மையை ஏற்க மறுத்தது. அவனது துதிபாடிகளும் ‘இவர் ஒரு திறமையான சூனியக்காரர்’ என்று கூறினர். ‘இவரை எவ்வாறு எதிர்கொள்வது?’ என்று தனது சகாக்களுடன் ஆலோசணை செய்தான். ‘நமது நாட்டின் திறமையான சூனியக்காரர்கள் அனைவருக்கும் அறிவிப்பு கொடு. அவர்கள் இவருடன் போட்டியிட்டும்’ என்று கூறினர் சகாக்கள்.
வந்த சூனியக்காரர்கள் போட்டி ஆரம்பம் ஆவதுற்கு முன் தெளிவாக ஒரு கேள்வியையும் கேட்டுக் கொண்டார்கள்.

‘மூஸாவை வென்றுவிட்டால் அதற்குரிய வெகுமதி எங்களுக்கு கிடைக்குமல்லவா?’ என்று கேட்டார்கள். தங்கள் சூனியத்தின் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கை நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்தை அவர்களுக்கு கொடுத்தது. ஃபிர்அவ்னும் வாக்குறுதியை கொடுத்தான். ‘நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்’ என்றான். இதை விட வேறு என்ன வேண்டும்? ஆட்சியை கையில் வைத்திருப்பவனுக்கு நெருக்கமாகி விட்டால் விரும்பியது எல்லாம் கிடைக்குமே. அதிகாரத்தை பயன்படுத்தி நாமும் சிறிது ஆட்டம் போடலாமே! இன்று அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கமாக உள்ளவர்கள் போடும் ஆட்டத்தை பார்த்தால் அந்த சூனியக்காரர்களின் நிலையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
ஃபிர்அவ்னின் வார்த்தைகள் கொடுத்த உற்சாகத்தில் போட்டியில் குதித்தனர். தங்களின் தடிகளை எறிந்து மக்களின் கண்களை மயக்கி மகத்தான சூனியத்தை செய்தனர். வெற்றியின் விளிம்பில் தாங்கள் இருப்பதாக அவர்கள் உணர்ந்த போது, அல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை தடியை எறியுமாறு அறிவித்தான். எறிந்தவுடன் அது பெரிய பாம்பாகி அவர்களின் கற்பனைகள் அனைத்தையும் விழுங்கி விட்டது. சூனியக்கலையில் ஜாம்பவான்களாக இருந்தவர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. தங்களின் சூனியங்கள் வீணாகி விட்டதை உணர்ந்த அவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டனர். தாங்கள் சிறுமைபடுத்தப்பட்டதையும் உணர்ந்தனர்.
தோல்வியை கண்டவர்கள் அத்துடன் நிற்கவில்லை. இத்தனை காலம் தாங்கள் செய்து வந்த சூனியங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதையும் உணர்ந்தனர். மூஸா என்ற சாதாரண மனிதரால் இதனை செய்திருக்க முடியாது. அவருக்கு மேலாக ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தார்கள். தங்களின் சக்திகளுக்கெல்லாம் மேலான சக்தி பெற்றவன் அல்லாஹ் மட்டும்தான் என்பதையும் அறிந்தனர்.
தங்களின் சூனியத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஃபிர்அவ்னை விட அல்லாஹ்தான் உயர்ந்தவன் என்பதை உணர்ந்து கொண்டனர். உணர்ந்தவர்கள் உடனே உரக்க உரைத்தனர், ‘அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டோம். அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவன் ஆவான்’ அதுவரை நிராகரிப்பின் பக்கம் இருந்தவர்கள், அல்லாஹ்வின் வல்லமையை கண்டவுடன் சரண் அடைந்தனர்.
தன்னுடைய அதிகாரத்தை காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூனியக்காரர்கள் மூஸாவின் பக்கம் சென்றதை பிர்அவ்ன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ‘நான் உங்களுக்கு அனுமதி அளிக்கும் முன்னரே நீங்கள் நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? இது மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சி என்று கூறினான். எஞ்சியிருக்கும் மக்களையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்த ஃபிர்அவ்ன் அராஜகத்தின் பக்கம் திரும்பினான்.
புதிதாக நம்பிக்கை கொண்ட அந்த மக்களை நோக்கி ‘உங்கள் அனைவரையும் மாறு கை மாறு கால் வாங்கி சிலுவையில் அறைவேன்’ என்று பயமுறுத்தினான். இப்போது தானே நம்பிக்கை கொண்டார்கள், சிறிது பயம் காட்டினால் மீண்டும் நம் பக்கம் திரும்பி விடுவார்கள் என்று நினைத்தான் போலும்.
ஆனால் அந்த மக்களோ மிகவும் உறுதியாக இருந்தார்கள். ‘நாங்கள் எங்கள் இரட்சகனின் பக்கமே திரும்ப செல்வோம். அவனது அத்தாட்சிகளை நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காக நீ எங்களை பழி வாங்குகிறாய்’ என்ற தெளிவாக கூறினார்கள். தங்களின் நம்பிக்கையில் தாங்கள் உறுதியாக இருக்க இறைவனிடம் ஒரு பிரார்த்தனையும் செய்தார்கள். ‘எங்கள் மீது பொறுமையை பொழிவாயாக, முஸ்லிம்களாக எங்களை கைப்பற்றி கொள்வாயாக’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.
மூஸாவை தோற்கடிக்க வேண்டும், பிர்அவ்னுக்கு நெருக்கமானவர்களாக ஆக வேண்டும் என்று விரும்பிய மக்கள், அல்லாஹ்வின் வல்லமையை புரிந்து அவனை நம்பிக்கை கொண்ட பிறகு அப்படியே மாறிவிட்டார்கள். ஃபிர்அவ்னின் நெருக்கத்தை விட அல்லாஹ்வின் நெருக்கத்தை தேர்ந்தெடுத்தார்கள். ஃபிர்அவ்னிடம் கொள்ளும் நெருக்கமானது சில காலம் மட்டுமே நிலைத்திருக்கும், ஆனால் அல்லாஹ்வின் நெருக்கம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை உணர்ந்தார்கள்.
அல்லாஹ்வின் நம்பிக்கை மனதில் வந்த பிறகு வேறு எந்த சக்திக்கும் அவர்கள் அடிபணிபவர்களாக இல்லை. ஃபிர்அவ்னின் குணத்தையும் அவனது கொடூரத்தையும் நேரடியாக கண்டவர்கள். அதிகார மமதையில் எதை வேண்டுமென்றாலும் செய்வான் என்பதையும் அறிந்தே வைத்திருந்தார்கள். அதுவரை அவன் முன் குனிந்து நின்றவர்கள், இறைநம்பிக்கை வந்தவுடன் அவனுக்கெதிராக உறுதியாக நின்றார்கள். தங்களின் நம்பிக்கையும் உறுதியும் தங்களின் உயிரை பறிக்கும் என்பதை அறிந்த பிறகும் அதற்கு அவர்கள் கவலைபடவில்லை.
ஃபிர்அவ்ன் கொடுக்கும் தண்டனை சில நிமிடங்களிலோ அல்லது மாதங்களிலோ முடிந்து விடும். ஆனால் பிர்அவ்னுக்கு கட்டுப்பட்டால் நிலையான மறுமையில் நிரந்தரமான வேதனையை அனுபவிக்க வேண்டுமே என்ற பயம் அவர்கள் மனதில் இருந்தது. நிலையற்ற உலகத்தை விட நிலையான மறுமையை தேர்ந்தெடுத்தார்கள். எவ்வளவுதான் உறுதியாக இருந்தாலும் அல்லாஹ்வின் உதவியின்றி எதையும் செய்ய முடியாது. எனவேதான் தங்களுக்கு உறுதியை வழங்குமாறு பிரார்த்தனையும் செய்தார்கள்.
இதுதான் சூனியக்காரர்களாக வந்து இறை நம்பிக்கையாளர்களாக மாறியவர்களின் சம்பவம். இறைநம்பிக்கை மனதிற்கு சென்றால் என்னவெல்லாம் செய்யும் என்பதை இவர்களின் வாழ்க்கை நமக்கு சொல்லித் தருகிறது. நமது இறை நம்பிக்கையை சற்று உரசிப் பார்ப்போமா?
சிந்நதனைக்கு
-ஏர்வை ரியாஸ்

இறைநம்பிக்கையின் அடையாளங்கள்


  அ.மு. கான் பாகவி  
நம்பகத் தன்மையும் நாணய மும் இறை நம்பிக்கை யின் அடையாளங்கள் எனலாம். நம்பியவனை ஏமாற்றிவிட்டு, சட்டத்தின் பிடியிலி ருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்றிருந்தாலும், இறைவன் என்னைத் தண்டித்து விடுவான் என்ற அச்சம் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான இறையுணர்வு; அதுதான் இறையாற்றலை உண்மையி லேயே புரிந்துகொண்டதன் விளைவு.
“உண்மையே பேசி, பொருளின் குறையை மறைக்காமல் நடந்துகொண்டால் வணிகத்தில் வளம் கிடைக்கும். பொய்பேசி, குறையை மறைத்தால் அந்த வணிகத்தில் ‘பரக்கத்’ (வளர்ச்சி) இருக்காது” என்றார்கள் நபிகளார்.
“வாய்மையோடும் நம்பகத் தன்மையோடும் நடந்துகொள்ளும் வணிகர், (மறுமையில்) இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள் (ஸித்தீகீன்), உயிர்த் தியாகிகள் (ஷுஹதா) ஆகியோருடன் இருப்பார்” என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெரிவித்தார்கள்.
அவ்வாறே, ஒருவர் ஏற்கும் பதவி, பொறுப்பு, நிர்வாகம், பணி... இவையெல்லாம்கூட, அவரை நம்பி ஒப்படைக்கப்படும் அமானிதங்கள்தான். அந்த அமானிதத்தை அவர் முறையோடு காக்க வேண்டும். அதற்கான ஆற்றல் இல்லையென்றாலோ, இருந்தும் மனமில்லை என்றாலோ அப்பொறுப்பை ஏற்கவே கூடாது. ஏற்றபின் கடமையாற்றாது பொறுப்பை வீணாக்குவதோ தவறாகப் பயன்படுத்துவதோ நம்பிக்கைத் துரோகமாகும்.
ஆனால், எங்கும் இந்தத் துரோகம்தான் இன்று நடக்கிறது. ஒருவர் நபிகளாரிடம் வந்து, யுகமுடிவு எப்போது? என்று வினவினார். மக்கள்முன் உரையாற்றிக்கொண்டிருந்த நபிகளார் தமது உரையை முடித்தபின், “நம்பகத்தன்மை (அமானிதம்) பாழ்படுத்தப்பட்டால் யுகமுடிவை நீர் எதிர்பார்க்க லாம்” என்றார்கள். அம்மனிதரோ, “அது பாழ்படுத்தப்படுவது எவ்வாறு?” என்று வினா தொடுத்தார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “தகுதியற்றவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படும்போது, நீர் மறுமையை எதிர்பாரும்” என்றார்கள்.
பொறுப்பில் உள்ளவர்கள், மக்களுக்குப் பதில் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும்! படைத்தவனுக்குப் பதில் சொல்ல வேண்டுமே! அவனை ஏமாற்ற முடியாதே! அவன் தண்டிக்க ஆரம்பித்துவிட்டால் யாராலும் காப்பாற்ற முடியாதே! எனவே, அமானிதம் காப்பது அனைவரின் சமய, சமூகக் கடமையாகும்.